Thursday, March 3, 2011

அப்பாலுக்கு அப்பால் - 2

சேட் ஒருவருக்கு குழந்தை பிறக்கவே இல்லை. இந்த சேட் பண்டரிபுரம் வந்து பாண்டுரங்கனை சேவித்தார். தமக்கு குழந்தை பிறந்தால் பாண்டுரங்கனுக்கு அழகான பொன்மாலை அணிவிப்பதாக வேண்டிக்கொண்டார். வேண்டிக்கொண்ட பின் சேட் தன் ஊருக்கு சென்றார். குழந்தை பிறந்தது. சேட், பண்டரிநாதனின் அருளால்தான் குழந்தை பிறந்தது என்பதை உணர்ந்து தான் நேர்ந்தபடியே அவனுக்கு தங்கமாலை அணிவிக்க முடிவு செய்தார். அதற்காக நரஹரி சோனாரின் கடைக்கு சென்றார் சேட். நரஹரியும் வரவேற்று பேசினார். பேச்சினூடே தமது அபிலாஷையை சொன்னார் சேட். அதிலும் எப்படி சொன்னார் என்றால் அந்த மாலையில் பகவானின் பத்து அவதாரங்களையும் அழகாக பதிக்க வேண்டும் என்று விண்ணப்பித்தார். ஒருமுறையேனும் கனவிலும் விஷ்ணுவை நினையாத நரஹரி சோனாருக்கு இது சாத்தியமாகப்படவில்லை. அவர் சேட்டை பார்த்து சொன்னார் "வேறு கடையை பார்த்து கொள்ளும். எம்மால் இது ஆகாது".
சேட் : ஏன் ஆகாது?
சோனார்: நாம் தசாவதாரங்களை பதிக்க  முடியாது. மேலும் பாண்டுரங்கனுக்காக முடியவே முடியாது.
சேட்:  அதுதான் ஏன்?
சோனார்: எமக்கு தலைவர் பரமசிவனே. வேறு ஒருவரை நாம் நினைப்பதில்லை. பிற தெய்வங்களிடம் எமக்கு தூஷனை இல்லை. சிந்தனையும் இல்லை.
சேட்: இது உமது தொழில். தொழிலில்  உமது உதவியை நாடிய என்னை  தள்ளுவது உமது தொழிலுக்கு செய்யும் அவமரியாதை அல்லவா? மேலும் உம்மைப்போல பொற்கொல்லர் இவ்வூரில் இல்லை என்பதனால்தான் உம்மிடம் வந்தேன் .
சோனார்: (அரை மனதோடு) சரி, சரி! அளவும் பொன்னும்  கொடுத்து செல்லுங்கள். செய்து வைக்கிறேன்.
மிக நேர்த்தியாக சோனார் பொன் மாலையை செய்தார். மத்ஸ்ய, கூர்ம, வராஹ , ந்ருசிம்ம, வாமன, திரிவிக்கிரம, பரசுராம, ராம கிருஷ்ண, புத்த, கல்கி அவதாரங்களை மிக அழகாக செய்தார். மாலை ஜொலிக்கத்தான்  செய்தது. ஒரு நல்ல நாளில்  சேட் வந்து மாலையை பெற்றுக்கொண்டு பாண்டுரங்கனுக்கு அணிவிக்க சென்றார். அணிவிக்கும்பொழுதுதான் தெரிந்தது. மாலை பாண்டுரங்கனுக்கு அணிவிக்க முடியாத அளவு இறுக்கமாய் அமைந்தது. சேட்டிற்கு துக்கம்.  அவருக்கு பாண்டுரங்கனை பார்க்கையில் தன் குழந்தை போல் தோன்றியது . மாலையை எடுத்துகொண்டு மறுபடி சோனாரிடம் வந்தார் சேட். சோனாரை நன்றாக  திட்டினார். "காசு வாங்கிக்கொண்டு வேலையை ஒழுங்காக செய்ய மறுக்கிறாய். சரியான பித்தலாட்டக்காரன் நீ" இப்பொழுது, சோனாரால் விட்டு விட முடியுமா? முதலில் ஒப்புக்கொண்டு இருக்கிறாரே? என்ன செய்வது? பரமசிவனை நினைந்தார். "பிரபோ! ஏன் என்னை சோதிக்கிறாய்?". இவர் பரமசிவனை நினைக்கையில் அங்கு பாண்டுரங்கன் சிரித்தான் "சோனாரே! என் விளையாட்டு இன்னும் முடியவில்லை. இப்பொழுதே நீர் சலித்துக்கொண்டால் எப்படி?".
    மாலையை வாங்கி அவசர அவசரமாய் வேலை செய்து பெரிது பண்ணிக்கொடுத்தார். சேட்டும் பாண்டுரங்கன் கோவிலுக்கு வந்தார். மாலையை அணிவித்தார். இப்பொழுது ஒரு குறை! மாலை மிக பெரிதாக நீண்டு இருந்தது! பண்டாக்கள் "என்ன அய்யா! இம்மாலையை அணிவித்தால் பாண்டுரங்கனுக்கு பொருத்தமாக இருக்காதே! ஏன் இப்படி அரையும்  குறையுமாக கொண்டு வருகிறாய். அந்த பொற்கொல்லனை கூப்பிட்டு அளவெடுக்க சொல்" என்றனர். மிக்க வருத்தத்தில் இருந்த சேட் இப்பொழுது மின்னல் அடித்தால் போல் பிரகாசமானார். ஆஹா! அருமையான யோசனை! இப்பொழுதே சோனாரை வரவழைத்து அளவெடுக்க சொல்வோம் என முடிவெடுத்தார். நரஹரிசோனாருக்கு செல்ல விருப்பமில்லை என்றாலும், காரியம் செய்ய ஒப்புக்கொண்டு விட்டதால் கண்ணைக்கட்டிக்கொண்டு தன்னை கோயிலினுள் கொண்டு செல்ல சொன்னார். அங்கு சென்று பண்டரிநாதனை அளவெடுப்பதற்காக தொட்டார். அவருக்கு தூக்கி வாரிப்போட்டது. இருப்பது யார்? தலையில் ஜடை இருப்பது போல் தோன்றியது அவருக்கு. கங்கையை தொட்டாற்போல் கைகளில் குளிர்ச்சி வேறு. சற்றே மேலே சென்றால் நாகமும் தென்பட்டது. கழுத்தில் நாகமும் ருத்திராக்ஷமும் கலந்து இலங்குவது தட்டுப்பட்டது. இடுப்பில் புலித்தோல். சட்டென கண்ணை கட்டியிருக்கும் துணியை எடுத்தார். வெளியில் பாண்டுரங்கன் சிரித்தான். சட்டென கண்களை கட்டிக்கொண்டார். மறுபடி தொட்டால் சிவவரூபம்தான் இலகியது. இரண்டு மூன்று முறை இப்படி ஆன பின், நரஹரி சோனாருக்கு  சிவபெருமானாக பாண்டுரங்கனே விளங்குகிறான் என்பதை உணர முடிந்தது. இப்படி நரஹரி நினைத்தவுடன் பாண்டுரங்கன் சிரித்தவாறு தனது இயல்பான தோற்றத்துடன் விளங்கினான். பின்னாட்களில் அவனது மிகச் சிறந்த பக்தராகவும் விளங்கினார்.
    அடுத்த இதழில் கர்நாடகத்தில் விளங்கிய சிறந்த கவிஞரும் சிவபக்தருமாகிய அல்லமபிரபு பற்றி பார்ப்போம்.

No comments:

Post a Comment