Wednesday, February 2, 2011

ஒரு சாதகரின் டைரிக்குறிப்பு - 8

வெகு நாட்களாக ஒரு மஹாத்மாவின் ஆஸ்ரமத்திற்கு போகவேண்டும் என்று ஆசைப்பட்டுக்கொண்டு வந்தேன். எல்லாவற்றிற்கும் ஒரு நேரம்  வர வேண்டுமோ என்னவோ! திடீர் என்று ஒருநாள் அந்த மஹாத்மாவின் ஆஸ்ரமத்திற்கு செல்ல வேண்டுமென்ற ஆவல் அதிகமாகி, அது ஒரு உந்துதலாக மாறியது. அதை என்னால் அடக்கவே முடியவில்லை.


                              இரவு முழுவதும் தூக்கமே வரவில்லை. அந்த ஆரமத்திற்கு போக வேண்டுமே என்று ஒரே தவிப்பு. தூக்கம் வராமல் இதே சிந்தனையுடன் படுத்துக்கொண்டிருந்த பொழுது, என்னுடைய பக்கத்தில் அமர்ந்து நாதஸ்வரம் வாசிப்பது போன்று நாதஸ்வர இசை அவ்வளவு துல்லியமாக என் காதுகளில் கேட்டது. நானும் எழுந்து பக்கத்து வீடுகளில் ஏதாவது தொலைக்காட்சி அல்லது வானொலியில் இருந்து, இந்த சப்தம் வருகின்றதா என்று பார்த்தேன். ஆனால், அப்படி எதுவும் இல்லை. தூக்கமும் இல்லை. விழிப்பும் இல்லை. அப்படி, இருநிலையிலேயே, இரவை கழித்தேன்.  மறுநாள் காலை கிளம்பி மாலை அந்த ஆஸ்ரமத்திற்கு போய் சேர்ந்தேன். எனக்கு தூக்கி வாரி போட்டது. ஏன்? நேற்று இரவு எந்த ஒரு நாதஸ்வர இசையை இரவு முழுக்க கேட்டேனோ, அதே இசையை அங்கு நேரில் சில நாதஸ்வர வித்வான்கள் அமர்ந்து வாசித்துக்கொண்டிருந்ததை கேட்டேன். அதே கீர்த்தனம். அடுத்தடுத்து நான் கேட்ட அதே கீர்த்தனங்களே வாசிக்கப்பட்டன. இதை என்னவென்று சொல்வது? இதுவும் ஒரு அனுபவம்.

No comments:

Post a Comment