Wednesday, February 2, 2011

மதுரமான மஹனீயர் - 179 Dr.A.Bhakyanathan

பகவானுடைய சான்னித்யம் நாளுக்கு நாள் குறையாமல் இருக்க வேண்டும். குறையாமல் இருந்தால் மட்டும் போதாது; நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கவேண்டும். எந்த இடத்தில் வேதபாராயணம், இதிஹாஸபுராணங்களின் பாராயணங்கள், அர்ச்சனம், உத்ஸவாதிகள், கீர்த்தனம், பக்தர்கள் சத்சங்கம், அன்னதானம் ஆகியவை நடைபெறுகிறதோ அவைகளினால் அங்கு சான்னித்யம் வளரும்.


              சில மூர்த்திகள் அர்ச்சாவதாரமாக மாறும்பொழுதே, தானாகவே அதில் ஒரு சான்னித்யம் வந்துவிடுவதும் உண்டு. சில மூர்த்திகள் பிரதிஷ்டை பண்ணக்கூடிய க்ஷேத்ரங்களின் மஹிமையினால் சான்னித்யத்துடன் விளங்குவதும் உண்டு.

            நம்முடைய ஆஸ்ரம வளாகத்தில் பிரதிஷ்டை ஆகி உள்ள கன்யாகுமரி ஜயஹனுமார் மூர்த்தி, எல்லாவிதத்திலும் சர்வ சான்னித்யத்துடன்  விளங்கி வருகின்றார். பக்தர்களுடைய பலதரப்பட்ட பிரார்த்தனைகள் ஸர்வ சுலபமாக நிறைவேறுவதால், அதைக் கேள்விப்பட்டு பக்தர்கள் அநேகர் வந்து ஹனுமாரை சேவித்து ஆனந்தம் அடைகின்றார்கள்.
  
              பகவான், தான் சான்னித்யத்துடன் விளங்குவதை பலவிதத்திலும் சுமுகமாக தெரிவிப்பார். வைத்தியநாதன் என்பவர்தான் தினமும் இந்த ஹனுமாரை சிரத்தையுடன் பூஜை செய்து வருகின்றார். ஹனுமார் ஸுப்ரஸன்னமாக இருந்து வருகின்றார். அவரை நன்றாக கவனித்துப் பார்த்தால், தம்மைத் தேடி வரும் பக்தர்களின் கஷ்டங்கள் விலக, ஆழ்ந்த ராம தியானமும், ஸதா ஜபமும் செய்து வருவது நன்றாக தெரியும். ஒருநாள் வைத்தியநாதன் ஹனுமாருக்கு சுமார் ஒரு கிலோ அளவுள்ள  வெண்ணையை நிவேதனம் செய்து, அதை அவருடைய ஸன்னதியிலேயே வைத்திருந்தார். மறுநாள் காலையில் அந்த வெண்ணையை எடுக்கலாம் என்று சென்றபொழுது, ஹனுமாரின் ஒரு பெரிய கை அதில் பதிந்திருந்தது நன்றாக தெரிந்தது. வைத்தியநாதனுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை.
 
            ஸ்ரீஸ்வாமிஜி அவர்கள் சன்னதிக்கு சேவிக்க வரும்பொழுது வைத்தியும் இந்த விஷயத்தை ஸ்ரீஸ்வாமிஜி அவர்களிடம் தெரிவித்தார். ஹனுமார் கரபர்ஸம் பட்ட அந்த வெண்ணையையும் காண்பித்தார். ஹனுமாரின் பிரத்யக்ஷ சான்னித்யத்தை உணர்ந்து ஸ்ரீஸ்வாமிஜி அவர்கள் மிகவும் சந்தோஷப்பட்டார்கள். அந்த ஹனுமாரின் கரபர்ஸம் பட்ட வெண்ணை பிரசாதத்தை தானும் எடுத்துக்கொண்டு, கூடியிருந்த பக்தர்களுக்கும் கொடுத்து அனுக்ரஹித்தார்கள்.

No comments:

Post a Comment