Wednesday, February 9, 2011

madhuramana mahaneeyar nov 2010 - 176- Dr.A.Bhakyanathan

நான்கு வருடங்களுக்கு முன்பாக ஸ்ரீஸ்வாமிஜி தூத்துக்குடியில் பக்தர் கதிரேசன் இல்லத்தில் ஓர்நாள் பல விஷயங்களை பேசினார். அப்பொழுது, "எவ்வளவோ ஊரில், பலநாட்கள் தங்கி, பிரவசனம் எல்லாம் செய்கின்றோம். புரியாத மொழியில் அஷ்டபதி, அபங்கம் என்று பாடுகின்றோம். அதன் ராக இனிமையும் தாளகட்டும், எல்லோருக்கும் ஒரு ஈர்ப்பை தருகின்றதே தவிர அதன் அர்த்தம் அவர்களுக்கு புரியாது. சுலபமாக எல்லோருடைய கஷ்டங்களுக்கும் விமோசனம் ஏற்படும்படியாக கூட்டு பிரார்த்தனை செய்யவேண்டும் என்று எனக்குள்ளே தோன்றிக்கொண்டே இருக்கின்றது.
          மஹாத்மா காந்தி கூட பிரார்த்தனை கூட்டங்களை நடத்தி உள்ளார். கதை கேட்டோம், பஜனை கேட்டோம், அர்ச்சனை செய்தோம், ஹோமத்திற்கு பணம் கொடுத்தோம், பரிகாரங்கள் செய்தோம் என்று எல்லோரும் சொல்வதை கேட்கின்றோம். ஆனால், கருணையே உருவான பகவானிடம் பிரார்த்தனை செய்தோம் என்று ஏன் சொல்வதில்லை. பிரார்த்தனை சுலபமாக இருக்கவேண்டும். அதுவும் வியாபாரமாகி விடக்கூடாது. பிரார்த்தனை வலிமை மிக்கது. சுலபத்தில் பலன் தரக்கூடியது. கலியினால்தான் மக்கள் இவ்வளவு துன்பத்தை அனுபவிக்கின்றார்கள். அந்த கலி உபாதையை மஹாமந்திரத்தால்தான் மட்டும் சுலபத்தில் போக்க முடியும் என்பதை மக்களுக்கு உணர்த்த வேண்டும்" என்று ஸ்ரீஸ்வாமிஜி ஒரு உத்வேகத்துடன் சொல்லி வந்தார்கள்.
             மேலும் ஸ்ரீஸ்வாமிஜி அவர்கள், "இதைத்தான் காஞ்சி மஹாஸ்வாமிகளும் ஆசைப்பட்டார். அந்தக்காலத்தில் சினிமாவில் நடித்து வந்தவரும் ஆன்மீகத்தில் விருப்பமுள்ளவருமான S.V.சுப்பையா மற்றும் பலரை கிராமங்களில் பாமர மக்களிடம் சென்று ராம நாமத்தை சொல்லி வர பணித்தார். மடத்தில் ராம நாமம் எழுதி கொடுத்தால், வெள்ளி காசு கொடுத்தார். திருப்பாவை, திருவெம்பாவையை வெளியில் கொண்டுவந்து ஒவ்வொரு கோவிலிலும் மார்கழி மாதத்தில் இசைக்க செய்தார். இவையெல்லாம் பெரிதாக பிரச்சாரத்திற்கு  பின்னாளில் வரவில்லை. பகவன்நாம போதேந்திராள், மஹாஸ்வாமிகள், ஸ்ரீஸ்ரீஅண்ணா எல்லோரும் இதற்காகத்தான் கவலைப்பட்டார்கள்.
           ராமகிருஷ்ணர், "பலர் கூடி ஒரு இடத்தில் பிரார்த்தனை செய்தால் அதற்கு விசேஷ சக்தி உண்டு" என்று அடிக்கடி சொல்வார்". மேற்கண்டவாறெல்லாம், தமது உள்ளக்கிடக்கையை ஸ்ரீஸ்வாமிஜி பகிர்ந்து கொண்டார்கள்.
          இப்படி அவர் பேசுவது பலிதமாவதை நாம்தான் பார்த்து வருகிறோமே? அப்படியே, மறுநாளே, முதல் MASSPRAYER தூத்துக்குடியில் நடந்தது. பின்னர், சென்னை காமராஜர் அரங்கத்தில் ஜனவரி1, 2007 அன்று, மஹாமந்திர கூட்டு பிரார்த்தனை பல ஆயிரக்கணக்கான அன்பர்கள் கலந்து கொள்ள நடைபெற்றது. இப்படி துவங்கிய இந்த மஹாமந்திர கூட்டு பிரார்த்தனை, தமிழ்நாட்டில் கிராமங்களிலும், நகரங்களிலும், இதர மாநிலங்களிலும், ஏன் இந்தியாவையும் தாண்டி பிற நாடுகளிலும் ஒரு கம்பீரமான அலை போன்று கிளம்பி  செல்வதை  பார்த்து  வருகிறோம்.
    சென்ற மாதம் அம்பாசமுத்திரம், தூத்துக்குடி, சிவகாசி, கோவில்பட்டி, விருதுநகர், கல்லிடைக்குறிச்சி, பெரியகுளம், மதுரை, திருச்சி, திருப்பூர், உடுமலைப்பேட்டை ஆகிய இடங்களில் நடந்தது. எல்லா ஊர்களிலும் 2500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டார்கள். ஸ்ரீவாரி டிரஸ்ட் என்ற டிரஸ்டின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திருப்பூர் MASSPRAYER அன்று சற்றேறக்குறைய 10000பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலை 4.30க்கு ஆரம்பித்த MASSPRAYER இரவு 8.30க்கு முடிந்தது. ஸ்ரீஸ்வாமிஜியும் நான்கு மணிநேரம் Non-Stop ஆக நாமத்தின் பெருமையை பல அற்புதங்களுடன் எடுத்து எடுத்து பேசினார். ஸ்ரீஸ்வாமிஜி நான்கு மணிநேரம் தொடர்ந்து பேசியது பெரிய விஷயமல்ல. கூடியிருந்த பக்தர்கள் நான்கு மணிநேரமும் கலையாமல் மெய்மறந்து கேட்டுக்கொண்டிருந்தார்கள். எல்லோருக்கும் பிரசாதமும் (உணவும்) அளிக்கப்பட்டது.

No comments:

Post a Comment