Thursday, March 3, 2011

மாலே மணிவண்ணா - 93 -மகாவித்துவான் மயிலம். வே. சிவசுப்பிரமணியன்

வைணவ சமய தத்துவப்படி, உலகத்தோற்றத்திற்கு அதாவது தனு-கரண-புவன லோகங்களுக்கு அடிப்படையான மூன்று காரணங்களாகவும் இருப்பவன் எம்பெருமானே என்பது அடிப்படைக் கொள்கைகளுள் ஒன்றாகும். ... (சென்ற இதழ் தொடர்ச்சி) கடலிலிருந்து அலைகள் தோன்றி கடலிலேயே  அடங்கிவிடுகின்றன.அது போல் இந்த உலகம் உன்னிடத்திருந்து தோன்றி, உன்னிடத்திலே ஒடுங்கி விடுகின்ற தன்மை நின்னிடத்துள்ளது  என்கிறது  திருச்சந்த விருத்தம்.
"திரிவித காரணமும் தானேயாய்"
"ஜகத்துக்கு திரிவி த காரணமும் தானேயாய்"
"நிமித்ததோ பாதாந  ஸஹகாரிகளும் தானே என்கை"
என்று திருவாய்மொழி வியாக்கியானங்களில் குறிக்கப்படுவதையும் இங்கு இணைத்து அறியலாம். இதையே இன்னும் விளக்குகிறது ஓர் உரை. "தான் ஓர் உருவே தனிவித்தாம்" என்பதற்கு, "தான்" என்கிற இத்தால் உபாதாநாந்தரம் இல்லை (வேறு முதற்காரணம் இல்லை) என்கை; "ஓர்" என்கிற இத்தால் ஸஹகார்ய அந்தரம் இல்லை (வேறு துணைக் காரணம் இல்லை). "தனி" என்கிற இத்தால் நிமித்தாந்தரம் (வேறு கருத்தா) இல்லை. "என்கை" என்றும், "முதல் தனிவித்தேயோ" என்பதற்கு, முதல்- நிமித்த காரணம், தனி- துணைக் காரணம், வித்து- உபாதான காரணம் மூன்றுமாக உள்ளவனே என்று எழுதிய உரைகளைக் காணுங்கால் இக்கருத்து மேலும் விளங்கும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை.
    நுண்மை நிலையின் அறிவுள்ள பொருள்களோடும் அறிவில்லாப் பொருள்களோடும் கூடியிருக்கும் பரம்பொருளே முதற்காரணம் என்று விளக்குகிறது திருச்சந்தவிருத்த உரை.
    இவ்வுலகத்தைப் படைத்தற்கேற்ற அறிவாற்றல்களோடு கூடிய பரம்பொருளே துணைக்காரணம் என்றும், தன்னில் வேறாகப் பிரிந்திராத அறிவுள்ளபொருள், அறிவில்லாப் பொருள்களை விசேடமாக உடைய நினைவோடு (சங்கற்பத்தோடு) கூடிய பரம்பொருளே வினைமுதல் என்றும் கூறுவர்.
    எனவே முதல், துணை, நிமித்த காரணன் ஆக ஜகத்துக்கு எம்பெருமானே என்ற கருத்தை விஷ்ணு ஸஹஸ்ர நாமம் தன் தொடக்கத் திருநாமத்திலேயே சொல்லிவிடுகிறது.
    1.விவம் - எல்லாமாக இருப்பவர் - உலகில் உள்ள எல்லாமும், உலகமும் அவரே; இறைவனைச் சொல்லால் குறிப்பிடுவது ப்ரணவம். பரம்பொருளும் அதன் விரிவான உலகமும் ஓங்காரமே. பரம்பொருள் உலகமாகக் காரியப்படும் நிலையில் முதலில் தோன்றியது ஆகாசத்தின் தன்மாத்திரையான ஒலிதான். அந்த ஒலியின் முதல் விளக்கம் "ஓம்" எனும் ப்ரணவம். அதனால் பரம்பொருளுக்கு விளக்கம் தரும் வேதத்தை ஓதத் தொடங்குகையில் முதலில் ஓங்காரம் இடம்பெறுகிறது. பிரணவத்தில் தொடங்கி பிரணவத்தில் முடிவதால், வேதமும் பரம்பொருளாகிறது. பிரணவம் உலகத்தில் எல்லா சப்தத்திலும் விரவி நிற்கிறது. உலகமாக விரிய இருக்கும் பரம்பொருளின் முதல் தோற்றம் ஒலி; அதிலிருந்து எல்லாமும். ஆகவே பிரணவமும் விவம். ஆகவே எல்லாமாய் இருப்பவர் இறைவனே. எல்லையற்ற பரிசுத்தமான மங்கள குணங்கள், பெருமை, இவை எம்பெருமானிடம் எல்லையற்ற  கருணையோடு கூடியுள்ளன. அவர் ஸ்வயம் பரிபூரணர். அதனால் விஷ்ணு விவம் ஆகிறார்.

No comments:

Post a Comment