Wednesday, February 2, 2011

ப்ருந்தாவனமும் நந்தகுமாரனும் - ஸ்வாமி கிருஷ்ணானந்தாஜி - 5 -

ஸ்வாமி கிருஷ்ணானந்தாஜி ஸக்ய பாவத்தில் பக்தி செய்து பகவானை காணவேண்டும் என்ற தீவிர தாபத்தை அடைந்தார். எப்பொழுதும் பகவானை நினத்து கண்ணீர் விட்டுக்கொண்டே இருந்தார். எப்பொழுது உறங்குகிறார் எப்பொழுது விழித்திருக்கிறார் என்று யாருக்கும் தெரியாது. ஏனென்றால் மாலை வேளைகளில் ஓரிரு மணிநேரம் தவிர அவரை யாரும் அருகில் சென்று கூட பார்க்க முடியாது. சில சமயங்களில் ஆவல் மிகுதியால், அவரை தரிசனம் செய்ய நள்ளிரவில் அவர் குடிலுக்கு சென்றால், அவர் அங்கு இருக்கவே மாட்டார். அருகிலுள்ள காட்டிலிருந்து கிருஷ்ண விரஹத்தில் அவர் கதறும் குரல் கேட்கும். ஒருமுறை அவரது பக்தரான ஸ்ரீராம்சரண்தா இந்தக்குரல் திசையை நோக்கி சென்று காட்டினுள் நுழைந்தார்.
அங்கே பாபா ஒரு மரக்கிளையை பற்றிக்கொண்டு நா தழுதழுக்க லோகம் ஒன்றை சொல்லிக்கொண்டிருப்பதை கண்டார். அதன் முதல் வரி-
யாமேன ஸாகம் கவாம் சாரணாய மததவாக்ரே ப்ரவதாமி தீன:
(யசோதை தாயே! தீனமாக நான் உன்னை பிரார்த்திக்கின்றேண். யாமசுந்தருடன் மாடு மேய்க்க எனக்கு அனுமதி தா!).
இதுபோல் அவரது திவ்யமான உன்மத்த நிலை, பல வருடங்கள் தொடர்ந்தது. ஒருநாள் நந்தக்ராமத்தில் ஸ்ரீகிருஷ்ணசந்திரனின் கோயிலில் பகவானைப் பார்த்து கொண்டே சண்டையிட்டு கொண்டிருந்தார். அப்பொழுது பகவானை பார்த்து கொண்டே இருந்தபொழுது, ஸ்ரீகிருஷ்ணசந்திரன் தன்னுடைய திவ்ய காந்தியை நாற்புறமும் பரப்பியவாறே ஆலயத்திலிருந்து வெளியே வந்தான். சிறிது நேரம் கழித்து மீண்டும் உள்ளே சென்று பூஜாரியிடம் "பாபாஜி என்னுடன் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார். அவருக்குப் போய் ரொட்டி கொடு" என்றான்.
அவ்வளாவுதான்! இதன் பின் பக்தனுக்கும் பகவானுக்குமிடையில் லீலைகள் ஆரம்பித்து விட்டன. இச்சமயத்தில் க்ருஷ்ணானந்தஜிக்கும் க்வாரியா பாபாவிற்கும் இடையில் நட்பு மலர்ந்தது. க்வாரியா பாபாவும் ஸக்ய பாவத்தில் பக்தி செய்த ஒரு ஸித்த மஹாத்மா. அக்காலத்தில் அவர் ரங்கஜி மந்திரில், ஒரு அறையில் தங்கி இருந்தார். க்ருஷ்ணானந்தாஜியும் அவருடன் அங்கேயே சென்று வசிக்கலானார். இருவரும் பரபர சங்கத்தில் பரமானந்தத்தை அடைந்தனர். இருவரும் வயதில் முதிர்ந்து விட்டபோதிலும், மனதில் தாங்கள் கிருஷ்ணனின் "பால ஸகாக்கள்" என்ற பாவத்திலேயே இருந்தார்கள். ஏதோ ஒரு பாவலோகத்தில் இருவரும் எப்பொழுதும் கிருஷ்ணசந்திரனுடன் லீலைகளிலேயே ஈடுபட்டிருப்பார்கள். ஒருநாள் க்வாரியா பாபா க்ருஷ்ணானந்தரிடம் "நாம் பாடசாலையில் படிக்க வேண்டும் என்பது நந்தபாபாவின் ஆணை. அவர் என்னிடம், நீங்கள் எல்லோரும் க்ருஷ்ணனுடன் சேர்ந்து ரகளை செய்கிறீர்கள். அதனால் பள்ளிக்கூடம் செல்லுங்கள் என்றார். அதனால் நாம் இனி பள்ளிக்கூடம் செல்ல வேண்டும். இல்லையென்றால் பாபா நம்மை கோபிப்பார் என்றார். இருவரும் மறுநாளையிலிருந்து ப்ருந்தாவனத்திலுள்ள "ப்ரேம மஹாவித்யாலயா" எனும் பள்ளிக்கூடத்தில் முதல் வகுப்பில் சென்று அமர ஆரம்பித்தனர். அப்பொழுது க்ருஷ்ணானந்தஜியின் பாண்டித்யமெல்லாம் எங்கு மறைந்ததென்று தெரியவில்லை! மஹா மஹா வித்வான்களுடைய ஸந்தேஹங்களையெல்லாம் சுலபமாக நிவாரணம் செய்யும் அவர் இன்று க்வாரியா பாபாவுடன் சேர்ந்து "அ, ஆ" படிக்க ஆரம்பித்து விட்டார். இந்த பாவம் கலையும் வரை இருவரும் பள்ளிக்கு சென்றார்கள். அந்த பள்ளியின் தலைமையாசிரியர் இந்த இரு மஹான்களின் உன்னத நிலையை, அறிந்திருந்தார். அதனால் அவர் இவர்களுடைய இந்த லீலைக்கு தனது முழு ஒத்துழைப்பையும் அளித்தார். இதுவன்றோ பக்தி!!

No comments:

Post a Comment